சனி, 26 ஜூலை, 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள்-9

சென்ற பதிவின் தொடர்ச்சி:-

 எனக்கு இருக்கும் அலுவலில் நிச்சயமாக முடியாது என்றேன். நீங்கள்

வராமல் நான் போக மாட்டேன் என்றார். சரி மிகவும் நல்லவராகவும்

இருக்கிறார். சரி என ஒப்புக் கொண்டு வள்ளி மலை அடிவாரத்தை

அடைந்தோம். வேலூருக்கு அருகில் உள்ளது வள்ளிமலை முருகப்

பெருமான் ஸ்தலம். எனக்கு மிகவும் பிடித்த ஸ்தலம். உடல் சிலிர்த்தது.

உள்ளம் உவகை கொண்டது. வள்ளி பிராட்டியையும், வடிவேல்

முருகனையும் பிரார்த்தித்து மலை ஏறினோம்.


ஐயா, பைரவர் வருவார், பால் சாதம் போட வேண்டும் என நாடியில்

வந்தது. பைரவரின் வாகனம் வருமா? என்றார். சொன்னவர் முருகப்

பெருமான், நிச்சயம் நடக்கும் என்றேன். உடன் பால் சாதத்தையும் எடுத்து

வந்தார். வள்ளிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகப் பெருமானைப்

பிரார்த்தனை செய்து சிறிது தூரம் மலையை நோக்கி நடந்தோம்.


வந்தார் பைரவரின் வாகனம். உடன் வந்த பள்ளியின் உரிமையாளருக்கு

ஒரே மகிழ்ச்சி. உடனே தனது கையில் இருந்த பால் சாதத்தை வைத்தார்.

பைரவ வாகனமும் அதை முழுவதுமான சாப்பிட்டு முடித்த பின் மலை

ஏறினோம். அங்கு எட்டு தூண் பகுதி வந்தவுடன் எனது உடல் தாங்க

இயலாத அளவிற்கு ஈர்ப்பு சக்தி ஈர்த்து விட்டது. இதற்கு காரணம்

அந்த எட்டு தூண் பகுதியை திருப்பணி செய்கின்ற சமயம் புணரமைக்க

முற்பட்டு அங்குள்ள பாறைகளை அகற்றும்போது குபீரென சாம்பிராணிப்

புகை வாசத்துடன் வந்தது. அதில் ஓர் உருவம் ஜடா முடியுடன் தவம்

இருப்பதும் தெரிய வந்தது. உடனே எடுத்த கற்களை அப்படியே போட்டு

மூடி விட்டு புணரமைக்காமல் விட்டு விட்டனர். இது வரலாறு. எட்டு

தூண் பகுதியில் சித்தர்கள் தவம் இருப்பதாக இன்னும் நம்பப் படுகிறது.

அதை இன்னும் உணர முடிகிறது. சற்று மேலே ஏறியவுடன் குடவரையில்

வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். அதை

தரிசனம் செய்துவிட்டு சற்று மேலே சென்றவுடன் பொங்கி அம்மன்

ஆலயம், ஸ்ரீ வள்ளி மலை சுவாமிகள் சமாதி பீடம், சூரியன் காணாத

அணை, வள்ளி மஞ்சள் குளித்த இடம், உச்சி லிங்கம், யானை வடிவில் ஒரே

கல் என பல ஆச்சரியமான, அதிசயமாக வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன.

அத்துணையும் தரிசனம் செய்தோம்.


யாருடனும் இவ்வாறு செல்வதில்லை. இருப்பினும் இவர் என்னுடன்

வந்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்றார். பைரவர் வந்ததை

மிகவும் மகிழ்ச்சியாகக் கருதினர். வழிபாடு முடிந்த பின் வீடு

திரும்பினோம்.



 சில மாதங்கள் கழித்து அவர் மீண்டும் வந்து நாடி கேட்டார். ஐயா, ஒரு

பெண் ஜாதகம் பொருந்தி வருவதாகச் சொல்கிறார்கள். இதை

மணமுடிக்கலாமா? எனக் கேட்டார். நாடியில் செய் என வந்ததால்

அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அதில் ஆச்சரியம் என்னவென்றால் பெண்ணின்

தந்தை பெயர் ஸ்ரீ முருகப் பெருமானின் பெயர், அவர்கள் நடத்துகின்ற

தொழில் நிறுவனத்தின் பெயரும் முருகப்பெருமானின் பெயர். இவர்கள்

காலம் காலமாக முருகனை வழிபடுகின்ற குடும்பம். இப்படி எல்லாமே

முருகமயமாக இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தார். ஐயா முதல் முறை

நாடி கேட்ட போது “வடிவேலன் வகை தனிலே வருவான்” எனப்

படித்தீர்கள். அது அப்படியே 100% பலித்துவிட்டது. இதை எப்படி நன்றி

சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை என்றார். எனது கையில்

ஒன்றுமில்லை எல்லாம் சித்தர்கள் செயல் என்றேன். திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு நானும் சென்றிருந்தேன். பல இலட்சங்கள் செலவு செய்து

மிக அற்புதமாக திருமணம் நடத்தினார்.



மீண்டும் தம்பதி சமேதராக வந்து நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியைத்

தரிசனம் செய்தார்கள். முருகப் பெருமான் ஆசிர்வதித்தார். இப்படி சற்று

நம்பிக்கைக் குறைவாக ஆரம்பத்தில் வந்து நாடி கேட்ட இவர் சின்ன

விஷயமாக இருந்தாலும் நாடியில் உத்தரவு கேட்டே செய்து வருகிறார்.

 ஜீவ நாடியைப் பொறுத்தவரை ஜோதிடத்தில் 12 காண்டங்கள்

சொல்வது போல் சொல்வதில்லை. எது எப்போது சொல்ல வேண்டுமோ

அது அப்போது சொல்லப்படுகிறது. எது அவசரத்தேவையோ அதற்கு

மட்டும் நாடியில் தீர்வு கேட்க வேண்டும். சாதாரண சின்ன சின்ன

விஷயங்களுக்கெல்லாம் நாடியில் பலன் கேட்க கூடாது. தீர்க்க முடியாத

பிரச்சினைகளைத் தீர்க்க நாடலாம். பொது பலன் கேட்கலாம். நாம்

எதிர்பார்த்தது அத்தனையும் வர வேண்டும் என்று நினைத்தால்

ஏமாற்றமே மிஞ்சும்.



இந்த பள்ளியின் உரிமையாளர் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தார்.

நாடி சொன்னபடி உரிய முறையில் திருமணம் நிச்சயமானது. நல்லபடியாக

திருமணமும் முடிந்தது. அதே போல் என்ன முருகப் பெருமான்

உரைக்கின்றாரோ அதை மட்டும் கடைபிடித்தால் போதுமானது.

 சில மாதங்கள் ஓடின. புது மாப்பிள்ளையாக வலம் வந்தவர் மீண்டும்

வந்தார். பூஜித்து நாடி படிக்கப்பட்டது.

“திருப்பமது ஆக திவ்யமதுகாக

திருச்செங்கோடு செல்லு

தித்திக்கும் வாய்ப்பு வரும்

திருமண இன்பம் கூடும்

மழலை வாய்க்கும்

மகிழ்ச்சி நிலையோங்கும்

தொழில் விருத்தி உண்டே”

 திருமணமானவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய வேண்டிய ஸ்தலம்,

திருச்செங்கோடு.இந்த திருச்செங்கோட்டு ஸ்தலத்தில் எனக்கும் என்னுடன்

வந்த சில அடியார்களுக்கும் ஸ்ரீலஸ்ரீ காசி சந்நியாசி நமசிவாய

சுவாமிகள் ஸ்பரிச தீட்சை கொடுத்து பஞ்சாட்சர மந்திரம் உபதேசம்

செய்தார்கள். அப்படி எனக்கும் அதிசயம் நடந்த ஸ்தலம். அம்மையும்,

அப்பனும் இரண்டறக் கலந்து அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி தரும் ஸ்தலம்.

எல்லாவற்றிற்கும் மேலாக அருணகிரி நாதரே நாலாயிரம் கண் வேண்டும்

உனைக்கான என்று பாடிய செங்கோட்டு வேலவன் இருக்கின்ற ஸ்தலம்.

இப்படி பல்வேறு சிறப்புகளுடைய திருச்சேங்கோடு செல் அங்கு சென்று

வழிபட்டு வந்தால் மழலைச் சொல் கேட்கும். தொழில் பெருகும் எனச்

சொன்னார். முருகப்பெருமான். தம்பதி சமேதராக சென்று தரிசனம் செய்து

வந்தார்கள். நாடி கேட்டார்கள் முருகன் அருளால் பிள்ளை பிறக்கும்

என வந்தது ஆனால் சுகப்பிரசவம் அல்ல அறுவை சிகிச்சை செய்ய

வேண்டும் என வந்தது அப்படியே நடந்தது. அறுவை சிகிச்சை மூலம்

பூசம் நட்சத்திரம், கடக ராசியில் ஆண் குழந்தை ஜெனித்தது. தொழிலும்

நல்ல மாற்றம். இன்னும் ஒரு பள்ளியைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்.

இப்படி சிலரது வாழ்வில் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி ஒரு மாபெரும்

வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது
.

                                     “ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

1 கருத்து: