திங்கள், 9 ஜூன், 2014

ஜீவநாடி இரகசியங்கள் பகுதி-4



இந்த பில்லி, சூன்யம் பற்றி கிரக ரீதியில் ஆராய்ந்து “அபிசாரப் பிரயோகம்

அறிவுறுத்தும் கிரக நிலைகள்” எனும் தலைப்பில் ஏற்கனவே “குருவருள்

ஜோதிடம்” பத்திரிக்கையில் ஜோதிட ரீதியாக ஆராய்ந்து எழுதி இருக்கிறேன்.

இந்த கணிப்பொறி காலத்திலும் மாறாத ஒன்று அபிசார பிரயோகம். தனக்கு


இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை தனது எதிரிக்கு ஒரு

கண்ணாவது போக வேண்டும் என்ற பழி வாங்கும் வெறி. இது அசுரர்கள்

தன்மை. இதில் பல குடும்பங்கள் சிதைந்து சீரழிந்து இருக்கின்றதை

வரலாறு பக்கம் பக்கமாய்ச் சொல்லும்.



இரும்பில் மாரணச் சக்கரம் வரைந்து மாரண மந்திரம் உச்சரித்து பலரை

மரணமே அடையச் செய்யும் மாந்தீரிகம் இன்றும் உண்டு. அதில்

மாற்றமில்லை. ஏன் அபிசாரத்தில் பாதிக்கப் படவேண்டும் என்பதற்கு

முன்ஜென்ம பாவங்களே சாட்சியாகி இந்த நேரத்தில் இந்த நபரால் தீங்கு

நேர வேண்டும், அந்த தீங்கு இந்த நபரால் தீர்க்கப்பட வேண்டும் என்ற

விதியின் சட்டத்தின் முன்பு நமது எந்த திட்டமும் வேலை செய்வதில்லை.

வெற்றி தருவதில்லை என்பது நிதர்சன உண்மை.



இந்த நண்பரின் அரிசி ஆலைக்குள் சுடுகாட்டுச் சாம்பலுடன், கள்ளி,

சுள்ளி, போன்ற விஷமுட்களைக் கொண்டு மாந்தீரிகம் செய்து தூவி

விட்டிருக்கிறார்கள். அது நாளடைவில் பிரச்சினைகளைத் தர ஆரம்பித்து

விட்டது. அதை ஞானஸ்கந்தர் நாடி உறுதி செய்ததால் நண்பரும்

திருவான்மியூர் சென்று ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகளை வணங்கி சண்முகக்

கவசத்தை ஆறு முறை பாராயணம் செய்து வந்தார். அப்போது ஒரு நாள்

கடுமையான மல வாசனை இவரது பூஜை அறைக்குள் வந்தது. அங்கு

அந்த துர்செய்வினை உறுதியானது.



சரியாக எட்டு நாள் கழித்து ஒரு ஞாயிறு அன்று ஆலைக்கு அருகில்

போடப்பட்டுள்ள கூரையால் வேய்ந்த கொட்டகை தீப்பிடித்து பலத்த

நஷ்டமும் ஆனது. எட்டு நாளிலேயே இப்படி சோதனைகள் தலை

விரித்து ஆடுகிறதே என நொந்துபோன ஆலை அதிபர்கள் மீண்டும்

வந்தனர். செய்வினை அபிசாரப் பிரயோகம் இருப்பதை நாங்கள் உறுதி

செய்துவிட்டோம். அதை எப்படி எடுப்பது என்பதை நாடியில் கேட்க

வேண்டும் என்றனர். மீண்டும் நாடி படிக்கப்பட்டது.





“காசிக்கு வாசி அவிநாசியிலே

அற்புத பைரவர் உண்டு

அவரை பூஜிக்கும் ஆசிபெற்ற

சிவாச்சாரியாரும் உண்டு

அவர் மூலம் சத்ரு சம்ஹார

திரிசதி ஹோமத்தைச்

சரியாகச் செய்தால்

பைரவர் மூலமே இது தீரும்

சத்தியம்”

அந்த சிவாச்சாரியாரும் நமது ஞானஸ்கந்தர் நாடியில் பயன் அடைந்தவர்.

அவர் மூலம் ஒரு பிரம்மாண்டமான யாகம் ஆலைக்குள் ஏற்பாடு

செய்யப்பட்டது. கணபதி பூஜை, சுப்ரமண்ய பூஜை, ஜபம் எனத் தொடங்கி

பூஜை பூர்ணாகுதி முன்பு சத்ரு சம்ஹார திரிசதியைச் செய்து வீட்டில்

வளர்க்கின்ற நான்கு நாய்களுக்கும் தலை வாழை இலை போட்டு படையல்

இடப்பட்டது. ஆச்சரியமாக அத்துணை நாய்களும் சாதத்தை சிந்தாமல்

சிதறாமல், இலைகளைக் கிழிக்காமல் மனிதன் எப்படிச் சுத்தமாகச்

சாப்பிடுவானோ அதேபோல் சாப்பிட்டது. பூஜை முடிந்த அடுத்த கணமே

பத்து பதினைந்து பேர் திரண்டு வந்து உங்கள் நாய் எங்கள் பட்டியில்

புகுந்து ஆடுகளைக் கடித்து குதறி விட்டு வந்துவிட்டது என்றும்,

இதனால் பல நஷ்டங்கள் ஏற்பட்டது என்றும் பெரிய தகராறு ஏற்பட்டது.



ஒரு வழியாக அது சமாதானமானது. ஏன் இப்படி ஒரு சம்பவம் நடக்க

வேண்டும் என்று மீண்டும் நாடி பார்க்கப்பட்டது.

“பைரவர் ஆசியால் தீரும் பிரச்சினை

பக்குவமாக பைரவரும் சென்று

நாய் வடிவில் நாசம் செய்தார்

இதுவே சூட்சுமம்”

என வார்த்தைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தோம். இப்படியும்

நடக்குமோ? என்ற ஆச்சரியமும் அடைந்தோம். அந்த நாய் ஏன் குறிப்பிட்ட

அந்த நபரின் பட்டியில் அடைத்துள்ள ஆட்டை ஏன் கடிக்க வேண்டும்?



அவர்தான் இந்த செய்வினையை வைத்தவரா? இல்லை துணை போனவரா?

அந்த முருகனே அறிவார். அதற்கு நாடியில் விளக்கம் சொல்ல முருகன்

மறுத்துவிட்டதால் விடை கிடைக்கவில்லை. ஆனால் அரிசி ஆலை

அற்புதமாக நடந்து வருகிறது. சித்தர்கள் ஆசியால் ஆலை அதிபர்கள் நமது

ஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்தில் மந்திர தீட்சை பெற்று ஜபம் செய்து

வருகிறார்கள். அவர்களை ஆன்மிகத்தில் உயரச் செய்யவே இறைவன்

நடத்திய நாடகம் என்றே கருதுகிறேன்.



செய்வினை, மாந்தீரிகம் என்ற பெயரில் பல போலிகளும் வருகிறார்கள்.

அதுவும் ஒரு கசப்பான அனுபவங்களாக அமைந்துவிடுகின்றன. ஒரு சிலர்

இந்த அபிசார பிரயோகம் என்ற பெயரை வைத்தே மிரட்டி பயமுறுத்தி

விடுகிறார்கள். அது சம்பந்தமாக இன்னும் ஓர் அனுபவம் உண்டு.

அதையும் இங்கே எழுதிவிடுகிறேன். காரணம் உண்மை எது? பொய் எது?

போலி எது? மாயம் எது? மந்திரம் எது? மகத்துவம் எது? என பகுத்துப்

பார்க்கின்ற அறிவு வேண்டும்.



மாந்தீரிக ஏவல் இருப்பதாக ஒருவர் கூறக் கேட்ட இன்னுமொரு நண்பர்

அதை சரி செய்யுமாறு கேட்டு இருக்கிறார். சரி என்னால் ஆகாதது

எதுவுமில்லை என்று கூறிய மந்திரவாதி பிரம்மாண்ட பூஜையைச்

செய்து அதில் ஒரு தேங்காயையும் வைத்து பூஜை செய்திருக்கிறார்.

அந்த தேங்காயில் அவருக்கு வைத்துள்ள செய்வினையை எடுப்பதாகக்

கூறி நல்ல கணிசமான தொகை ஒன்றைப் பெற்றுள்ளார். பூஜையும்

முடிந்தது. பூஜையில் வைத்த தேங்காய் உடைத்துப் பார்க்கலாம் என்றார்

மந்திரவாதி. எனது நண்பரும் மிக ஆர்வமாக தேங்காயைப் பார்த்தார்.

தேங்காய் உடைக்கப்பட்டது. அதன் உள்ளே ஒரு கோழியின் காலும்,

ஒரு செம்புத் தகடும் இருந்தது. ஆச்சரியத்தில் மூழ்கிய எனது நண்பர்

இது எப்படி சாத்தியம் எனக் கேட்டுள்ளார். அதற்கு இந்த மந்திரவாதி

கோழியின் மூலமே ஏவல் செய்துள்ளனர் என்று சொல்லி இருக்கிறார்.



மேலும் தேங்காயில் உள்ள செப்புத் தகட்டைப் பிரித்துப் பார்க்க அதில்

எனது நண்பரின் பெயரை எழுதி மரணம் என்று எழுதப்பட்டது கண்டு

மீண்டும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார் எனது நண்பர்.

நீங்கள் செய்வினையிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டீர்கள். இனி அச்சம்

தேவையில்லை என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.



மீண்டும் சில நாட்கள் கழித்து ஏதேச்சையாக என்னை வந்து சந்தித்தார்

அந்த நண்பர். விபரங்கள் அனைத்தையும் கூறினார். எனக்கே பிரமிப்பாக

இருந்தது. சரி எங்கேயோ வைத்த தகடு எப்படி இந்த தேங்காய்க்குள்

வந்தது என்றேன்? அதுமட்டுமில்லாமல் கோழியின் கால் மூலம்

ஏவிவிட்டது சரி அந்த கோழியின் கால் எப்படி தேங்காய்க்குள் வந்தது?

எனக்கு சற்று சந்தேகமாகவே இருக்கவே பூஜையில் அமர்ந்தேன்.

சிறப்பாக பூஜை செய்து ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியை பிரித்து இதற்கு

சரியான பதில் வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். பின்வரும் பதில்

கிடைத்தது.

“மாய வேலை மாயாஜாலம்

தந்திர வேலை இந்திர ஜாலம்

மோடி வித்தை கோடிவித்தை

ஜால வித்தை கோலவித்தை

கோடி கோடி உண்டுண்டு

யுகத்திலே அதில் இதுவுமது

தேங்காயின் கண்ணிலே

கச்சிதமாய் உட்புகுத்தி

காட்டியது வித்தை வித்தை

வித்தையது வித்தையே!”

தேங்காயை உரித்துப் பார்த்தால் மூன்று கண் இருக்கும். அதில் ஒன்று

லேசாக இருக்கும். அதை சிறிது அழுத்தம் செய்தால் ஒட்டை விழும். அதில்

ஒரு கோழியின் காலைப் போட்டுவிட்டால் தேங்காய்க்குள் கோழியின் கால்

எளிதாகச் சென்றுவிடும். அதேபோல் ஒரு சிறிய செம்புத் தகட்டில் பெயரை

எழுதி கூர்மையாகச் சுருட்டி அதே துளையில் எளிதில் உள்ளே போட்டு

விடலாம். பின்பு குடுமியை பசை போட்டு ஒட்டி சிறிது சந்தனத்தையும்

மஞ்சளையும் குழைத்து பூசிவிட்டால் தடயமே தெரியாது. ஜீம்…பூம்…பா…

என பூஜை செய்து தேங்காயை உடைத்தால் உள்ளே என்ன வைத்தோமோ

அதுஅப்படியே வந்து ஆச்சரியப்படுத்தும். விஷயம் தெரியாதவர்களை பாமர

மக்களை ஏமாற்றும் வித்தை இது போல் கோடியுண்டு யுகத்திலே என்று

முருகப் பெருமான் உரைத்தார். அதே போல் தேங்காய்க்குள் மல்லிகைப்

பூவை எடுப்பார்கள். ஒரு சுண்டெலியைப் பிடித்து வந்து தேங்காய்க்குள்

விட்டுவிட்டால் தேங்காய் நடந்து ஓடும். இதை ஒருவர் செய்து வருகிறார்.

இப்படி பல வித்தைகள் உண்டு. நாகரீகமாக மேஜிக் ஷோவில் இவற்றைப்

பார்க்கலாம்

தொடரும்....

1 கருத்து: